திங்கள், 9 ஜூலை, 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்....
وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ


மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன்.10 நான் அநீதி இழைத்தோரில் ஆகி வி ட்டேன்'' என்று இருள்களிலிருந்து429 அவர் அழைத்தார்.21:87.



கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்


கோபத்தை கட்டுப் படுத்துபவர்களை சிறந்த வீரன் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114.

இன்றுக் கோபத்தைக் காட்டுவதே வீரத்தின் வெளிப்பாடு என்று மாற்றப்பட்டு விட்டது. காட்டுக் கூச்சல் இடுவதும் கை,கால்களை உதறுவதும் கோபம் வரவில்லை என்றாலும் வரவழைக்க முயற்சி செய்வதும்  இன்றைய மக்களிடத்தில் சகஜமாகி விட்டது,

இவ்வாறு செய்வது அவரது அமலையும், ஆரோக்கியத்தையும் சீர்குலைப்பதை அவரகள்; அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டாரகள்;.

கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாப் புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்தும் விடும்.    


பாதிக்கும் ஆரோக்கியம்.
ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளும் பொழுது நரம்பு மண்டலம் விரிவடைந்து கோபம் தனிந்தப் பின் நரம்புகள் சுருங்கத் தொடங்குகின்றன சுருங்கிய நரம்புகள் பழைய நிலையை அடையாமல் தளர்ந்து விடுவதுண்டு அவ்வாறுத் தளர்ந்து விட்ட நரம்புகளில் ஓடும் இரத்தம் பழைய படி மிதமாக ஓடாமல் வேகமாக ஓடத் தொடங்கும். இதன் மூலமாகவே இரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், கொழுப்புச் சத்துப் போன்ற உடலை ஆக்ரமித்துக் கொண்டு அகலாத நோய்கள் உருவாகின்றன.

இரத்தத்தில் கலக்கக் கூடிய, இரத்த வேகத்தை அதிகரிக்கக் கூடிய இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்புப் போன்ற நோய்களை கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஹெவிடோஸ் கொடுக்கின்றனர் இந்த ஹெவிடோஸ்கள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து வெகுவிரைவில் மரணத்திற்கு இழுத்துச் செல்கின்றதை அவர்கள் அறிவதில்லை அறிந்தால் அடக்கத்துடன் நடந்து கொள்ளத் தவற மாட்டார்கள்.


பாதிக்கும் அமல்.
கோபத்தின் வாயிலாககத் தான் ஷைத்தான் மனிதனை நெருங்குகிறான் கோபம் வரும்பொழுது வார்த்தைகள் வரைமுறை இல்லாமல் வந்து எதிரில் இருப்பவர்களை திட்டும் பொழுது அவர்களை கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது எதிரில் இருப்பவர் சிறியவரா ? பெரியவரா ? மரியாதைக்குரியவரா ? என்றெல்லாம் பார்க்க விடாது.

திட்டித் தீர்த்து விட்டு கோபம் தனிந்தப்பின் சிலர் வருந்தி வருத்தம் தெரிவிப்பார்கள், பலர் வருந்தவும் மாட்டார்கள் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள்.

வருந்தி வருத்தம் தெரிவித்தாலும் அது சிலருக்கு (சிறிய வயதுக் காரருக்கு)ப் பொருந்தும், பலருக்கு (மூத்த வயதை உடையவர்களுக்கு, கட்டாயம் மரியாதை செலுத்தப் பட வேண்டியவர்களுக்கு)ப் பொருந்தாமல் உறவே முறிந்து விடும். 

வரைமுறை இல்லாமல் திட்டியவர் மன்னிப்புக் கேட்பதற்கு முன் அவர் இறந்து விட்டாலோ அல்லது இவர் இறந்து விட்டாலோ மறுமையில் அவர் இவரிடமுள்ள நன்மைகளைப் பறித்துக் கொள்வார்.

காரணம் அங்குப் பணமோ, தங்கக் காசுகளோப் பயன் தராமல் நன்மைகள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்பதால் நன்மைகளைப் பறித்துக் கொள்வார். 

கோபம் ஏற்படுவதால் அமலும் பாதிக்கிறது, ஆரோக்கியமும் பாதிக்கிறது என்பதால் மனித சமுதாயத்தின் நலவுக்காக இறக்கி அருளப்பட்ட இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு கோபம் கொள்வதை தடை செய்கிறது. 

இஸ்லாம் தடை செய்த ஒவ்வொன்றின் மீதும் கவர்ச்சி கொள்ளச் செய்து அதன் பால் ஈர்ப்புக் கொள்ளச் செய்வது ஷைத்தானின் வேலை.

உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் ஒவ்வொரு மனிதனையும் ஷைத்தான் விட்டு வைக்க மாட்டான் இணைவைப்பு, விபச்சாரம், வட்டிப் போன்றக் கொடியப் பாவங்களிலிருந்து விலகி இருப்பவர்களில் கூடப் பலர் ஷைத்தான் விரிக்கும் இந்த கோப வலையில் வீழ்ந்து அமல்களைப் பாழாக்கிக் கொள்வதிலிருந்து  தடுத்துக் கொள்ள முடிவதில்லை.   


படிப்பினைத் தரும் யூனுஸ்(அலை) அவர்களின் கோபம்
கோபம் என்றதும் திருக்குர்ஆனைப் புரட்டக் கூடியவர்களுக்கு யூனுஸ்(அலை)அவர்களின் சம்பவம் நினைவுக்கு வரும். யூனுஸ்(அலை) அவர்களுடைய சமுதாயத்து மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்து இறுதியாக அவர்கள் அழிக்கப்படும் நேரம் நெருங்கியதும் அவர்களை விட்டு யூனுஸ்(அலை) அவர்கள் விலகிச் சென்று விடுகிறார்கள்;.

சிறிது நாட்கள் கழிந்து நகருக்குள் திரும்பிவந்து பார்த்தபொழுது அவர்களில் யாரும் அழிக்கப்படாததுக் கண்டு இறைவன் மீது கோபம் ஏற்பட்டுவிடுகிறது யூனுஸ்(அலை)அவர்களுக்கு. இறைவன் நல்லதொரு முடிவையே மேற்கொண்டிருப்பான் என்று அவர்களை நிதானமாக சிந்திக்க விடாமல் கோபம் தடுக்கிறது. 

கோபம் கொப்பளிக்க நடையைக் கட்டுகிறார்கள் கடல் குறுக்கிடுகிறது கடலைக் கண்டப் பிறகுக் கூட ஊரை நோக்கித் திரும்ப விடாமல் கோபம் தடுக்கிறது. 

இனி இந்த மக்களுடைய முகத்தில் விழிப்பதை விட இவர்களின் கண் காணாத திசைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தையே கோபம் மேலோங்கச் செய்கிறது.

எதிரில் கப்பல் ஒன்று தென்பட கால்களை கோபம் தண்ணீரில் இறக்கி விடுகிறது. தண்ணீரில் இறங்கி நின்று கொண்டிருந்த யூனுஸ்(அலை) அவர்கள் நீந்திச் சென்று எதிரில் நின்று கொண்டிருந்த கப்பலைப் பிடிக்கிறார்கள் ஆனால் கப்பலில் இருந்தவர்களோ அவரை ஏறவிடாமல் தடுக்கின்றனர்.

இவரை ஏற்றிக் கொள்ளலாமா ? வேண்டாமா ? எனும் எண்ணத்தை அல்லாஹ் அவர்களுடைய உள்ளத்தில் விதைத்து விடுகிறான் இறைவனின் மீது கோபம் கொண்ட இறைத்தூதரின் பயணம் இது என்பதால் இறையருள் தடுக்கப்பட்டு விடுகிறது.

குழப்பத்தில் ஆழ்ந்த பயணக் காரர்கள் இறுதியாக சீட்டுக் குலுக்கிப் போட்டு அனுமதி கிடைத்தால்  ஏற்றிக்கொள்வோம் எனும் முடிவுக்கு வர சீட்டும் குலுக்கப்படுகிறது அனுமதி மறுக்கப்பட்டு ஏற்ற வேண்டாம் என்ற முடிவு வரவே அவர்களால் யூனுஸ்(அலை) அவர்கள் கடலில் தள்ளி விடப்படுகிறார்கள் மீன் விழுங்கி விடுகிறது.

நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது அவர்கள் சீட்டுக்குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. திருக்குர்ஆன். 37: 140, 141 142. 

ஒரு வழியாக மீன் அவரை விழுங்கியப் பிறகு யூனுஸ்(அலை) அவர்களின் கோபம் முற்றுப் பெறுகிறது தவறை நினைத்து யூனுஸ்(அலை)அவர்கள் வருந்துகிறார்கள்.

''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். திருக்குர்ஆன். 21:78

இவ்வாறுத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு சர்வ சக்தி வாய்ந்த ஏகஇறைவனின் வல்லமையைப் புகழ்ந்தும் தொடர்ந்து துதித்துக்கொண்டே இருந்தக் காரணத்தால் தடுக்கப்பட்ட இறையருள் யூனுஸ்(அலை) அவர்களுக்கு மீண்டும் இறைவனால் திருப்பப்படுகிறது மீனுடைய வயிற்றில் அவரை அல்லாஹ் பாதுகாப்பாக தங்கச்செய்து விடுகிறான்;. கப்பலில் ஏறுவதற்கு கிடைக்காத இறையருள் மீன் வயிற்றில் இருக்கும் போது கிடைத்து விடுகிறது.

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். திருக்குர்ஆன். 68:49.

யூனுஸ்(அலை) அவர்கள் கோபத்தால் எடுத்த முடிவை அல்லாஹ் மன்னித்து மீன் வயிற்றிலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறான்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம்... திருக்குர்ஆன்.21:88.

ஒரு வெட்ட வெளியில் கொதிக்கும் மணலில் அவர்கள் வீசப்படுகிறார்கள் எழுந்து நடக்க முடியாத பலஹீனமான நிலையில் அவர்கள் இருந்ததால் உடனடியாக அவர்களின் அருகில் சுரைச் செடி ஒன்றை முளைக்கச் செய்து அவர்கள் மீது நிழல் படரச் செய்து விடுகிறான் கருணையாளன் அல்லாஹ் அதில் அவர்கள் இளைப்பாறி எழுந்து நடக்கத் தொடங்கினார்கள்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். திருக்குர்ஆன். 37: 145. 146.

யார் தனது தவறை நினைத்து தவ்பா செய்து விட்டாலும் அவர்களது கடந்த காலத் தவறை பட்டியலிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல் மொத்தத் தவறையும் அப்பொழுதேக் கழுவித் தூய்மையாக்கி விட்டு அவரை தனது சிறந்த அடியார்களில் ஒருவராக ஆக்கி விடுவதுடன் அவர் கேட்டதையும் கொடுப்பான் கேட்காததையும் கொடுப்பான் கொடையாளன் அல்லாஹ்.

இருள் சூழ்ந்த மீன் வயிற்றிலிருந்து பலஹீனமான நிலையில் கொதிக்கும் சுடுமணலில் வீசப்பட்டதும் யூனுஸ்(அலை)அவர்கள் இறைவனிடம் நிழல் கேட்க வில்லை. ஆனால் அவருக்கு இப்பொழுது நிழல் அவசியம் தேவை என்பதை அறிந்து அவனாகவே அந்த இடத்தில் சுரைச் செடியை முளைக்கச் செய்து நிழல் கொடுத்தான் கருணையாளன் அல்லாஹ்.


கோபத்திற்கு காரணம் என்ன ?
யூனுஸ்(அலை)அவர்களுடைய சமுதாயத்து மக்கள் அழிக்கப்படவேண்டும் என்பது இறைவனின் வாக்காக அமைந்து அதற்கான நேரமும் யூனுஸ்(அலை) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் தான் அங்கிருந்து அவர்கள் வெளியேறினார்கள் வெறியேறிய உடன் அந்த மக்கள் இறைவனிடம் தவ்பா செய்து இறையருளை அடைந்து கொண்டனர் இது அவர்களுக்குத் தெரியாது.

என்ன நடந்தது என்பதை அல்லாஹ்விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கோபம் மிகைத்து விட்டது இது தான் நடந்தது.

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக செய்தியை பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் யூனுஸ்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டிருந்தால் அல்லாஹ் பதிலளித்திருப்பான். 

ஏற்கனவே நூஹ் (அலை) அவர்களின் மகனை அலை இழுத்துச் சென்ற பொழுது அவர்களுக்கும் இறைவன் மீது கோபம் ஏற்பட்டது ஆனால் இவர்களைப் போன்று அவர்கள் கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவசர முடிவை மேற்கொள்ளாமல் தனது வருத்தத்தை இறைவனிடம் அடக்கத்துடன் தெரிவித்தார்கள் அதற்கு இறைவனும் பதில் கொடுத்தான் அந்த பதிலில் திருப்தி கொண்டு இறைவனின் வாக்குறுதியின் மீது அவநம்பிக்கைக் கொண்டதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள். 

இனிமேல் யூனுஸ்(அலை)அவர்களுடைய வாழ்நாளிலும் இதுப்போன்ற கோபம் வரக்கூடாது என்பதற்காகவும், இனி வரக்கூடிய நபிமார்களுக்கும் இதுப்போன்றக் கோபம் வரக்கூடாது என்பதற்காகவும் சில நெருக்கடியை இறைவன் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்து விட்டு அந்த சம்பவத்தை இறுதி நபிக்கு வழங்கிய திருக்குர்ஆனிலும் இடம் பெறச்செய்ததுடன் மீன் வயிற்றில் இருந்தவரைப்போன்று நீரும் ஆகிவிடாதீர் என்று அவ்வப்பொழுது முஹம்மது(ஸல்) அவர்களையும் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தான் நீதியாளன் இறைவன்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். திருக்குர்ஆன். 68:48.


நமக்குள்ளப் படிப்பினைகள்
திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள யூனுஸ்(அலை)அவர்கள் கோபத்தில் எடுத்த முடிவினால் அவர்கள் அடைந்த துயரத்தை நினைத்துப் படிப்பினைப் பெற வேண்டிய நம்முடைய சமுதாயத்து மக்களிலும் கூடப் பலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சிலக் காரியங்கள் செய்வதற்கு முன் கோபம் முக்கியப் பங்கு வகிக்கிறது.  

கோபத்தின் மூலமாக எடுக்கும் எந்த அவசர முடிவிலும் இறையருள் அறவே இருக்காது மாறாக இறைவனின் கோபமே நிறைந்திருக்கும் என்பதற்கு யூனுஸ்(அலை) அவர்களின் நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாகும்.  

யூனுஸ்(அலை) அவர்களின் நிகழ்வு நபி மார்களுக்கு மட்டும் உள்ளதல்ல மாறாக ஏகஇறைவனை நம்பிக்கைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் உள்ளதாகும்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். திருக்குர்ஆன். 21:88.

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவர்களாக இருந்தால் கோபம் கொள்வதை தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்து விட்டால் வல்ல ரஹ்மான் யூனுஸ்(அலை) அவர்களுக்கு செய்த உதவியைப் போல் நமக்கும் செய்வதாக வாக்களிக்கிறான்.

அடிக்கடி கோபப் பட்டு அதனால் நற்செயல்களின் நன்மைகளையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு மறுமையில் தோல்வியாளர்களின் வரிசையில் நிற்காமல் நிதானத்துடனும், அடக்கத்துடனும் நடந்து கொண்டு கேட்க வேண்டியவர்களிடம் முறையாக கேட்டறிந்து நிதானமாக ஒரு முடிவை மேற்கொண்டு நமக்கும் எதிராளிக்கும் யாதொரு பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொண்டால் ஆரோக்கியத்திந்கும் சிறந்தது அமல்களினால் கிடைக்கும் நன்மைகளும் வீண் போகால் மறுமையில் வேறெவருடைய நன்மையும் தேவையில்லாத அளவுக்கு நம்முடைய நன்மைகளைக் கொண்டு வெற்றியாளர்களின் வரிசையில் அணிவகுக்க வல்ல அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி ஆருள் புரிவானாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.

ஏகஇறைவனின் திருப்பெரால்...

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ {159}

3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

கோபத்திலும் நிதானம் தவறாமை.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்தக் கட்டுரையில் யூனுஸ்(அலை)அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் மூலம் நமக்கும் உண்டானப் படிப்பினைகளைப் பார்த்தோம்.

அருளாலன் அல்லாஹ்வின் அருள் மட்டும் யூனுஸ்(அலை)அவர்களின் மீது அருளப்பட்டிருக்க வில்லை என்றால் அவர்களுடைய நிலை இவ்வுலகிலும் மறுஉலகிலும் படுதோல்வி அடைந்திருக்கும். 

உலக மக்களுக்கு படிப்பினையாக்குவதற்காக கடைசி நேரத்தில் யூனுஸ்(அலை) அவர்களை காப்பாற்றி தவ்பா செய்ய வைத்து அதன் பின்னர் அவர்களுக்கு உதவியும் செய்து அதற்கு முந்தைய நபித்துவப் பொறுப்பையும் வழங்கி கண்ணியப் படுத்தினான்.

ஒரு வருடமோ அல்லது ஆறு மாதமோ விலக்கி வைத்து விட்டு அதன் பிறகு நபித்துவப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைக்காமல் மன்னிக்கப்பட்ட அடுத்த கனமே முந்தைய நபித்துவப் பொறுப்பை ஒப்படைத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு மீண்டும் தூதராக நியமித்தான் இதனால் தான் அவனை அளவற்ற அருலாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அழைக்கின்றோம் அவனுடைய அன்புக்கும், அருளுக்கும் எல்லை இல்லை.

மேற்காணும் சம்பவத்தைக் கூறி நீங்களும் அவரைப்போன்று ஆகிவிடாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்ததுடன்  அவர்கள் மீதும் அல்லாஹ் தன் அருளை இறக்கி தொடர்ந்து பாதுகாத்து வந்தான்.

அல்லாஹ்வின் அருள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பேராபத்துகளிலிருந்து மட்டும் பாதுகாத்ததுடன் நில்லாமல் பெரும் கோபங்களிலிருந்தும் தடுத்து வந்தது அதனால் அண்ணல் அவர்கள் மிருதுவானத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள்.

அவர்களுடன் இணைந்திருந்த மக்களிடம் அன்பு செலுத்தி அரவனைத்துக் கொண்டார்கள், அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக பெரிய அளவில் பிடித்து தண்டனைக் கொடுக்காமல் அவற்றை அலச்சியம் செய்தார்கள், அவர்கள் விளங்கிக் கொள்ளும் விதம் அவர்களுடைய தவறுகளை மிக இலகுவாக எடுத்துக் கூறினார்கள் அந்த விளக்க உரைகள் அவர்களை மீண்டும் அந்த தவறுகளை செய்ய விடாமல் அரணான நின்று கொண்டது.  

யார் மீதும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கோபம் கொண்டது கிடையாது, கடு கடுத்தது கிடையாது, முகத்தைத் திருப்பிக் கொண்டது கிடையாது. உலக ரட்சகன் அல்லாஹ் தன் அருளால்  அவர்களை சூழ்ந்து கொண்டதே இதற்கு காரணமாகும்.

3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை பார்த்துக்கொண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ? அவனால் சும்மா இருக்க முடியுமா ?

இந்த கட்டமைப்பை எப்படி சிதைப்பது ?
இவர்களை எப்படி பாவத்தாளிகளாக ஆக்குவது ?

இவர்கள்

              இணைவைக்க மாட்டார்கள்,
              பொய் சொல்ல மாட்டார்கள்,
              புறம் பேச மாட்டார்கள்,
              கொலை செய்ய மாட்டார்கள்,
              கொள்ளை அடிக்க மாட்டார்கள்,
              விபச்சாரம்  செய்ய மாட்டார்கள்,
              கொடிய வட்டியில் வீழ மாட்டார்கள்.

அதனால் ஆதம், ஹவ்வா(அலை) அவர்களை மடக்கியதுப் போன்றே இவர்களையும் மடக்குவது என்ற முடிவுக்கு வந்து செல்வந்தர்களும், உயர்ந்த குலத்தவர்களுமாகிய சிலருடைய சிந்தனையில் இஸ்லாம் சரி தான் ஆனால் முஹம்மதுடன் இணைந்திருக்கும் ஆட்கள் நமக்கு நிகரானவர்களாக இல்லை அவர்களுக்கும், நமக்கும் மத்தியில் சிறிது ஏற்றத் தாழ்வை முஹம்மது ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இணைவதில் நமக்கு ஆட்சேபனை இருக்காது என்றுத் தூண்டுகிறான்.

முஹம்மது(ஸல்)அவர்கள் அவர்களின் சபைக்கு அழைக்கப்பட்டு பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது அவ்வேளை அண்ணல் அவர்களின் தோழர்களில் ஒருவரான கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள்  அவ்விடத்தைக் கடக்க நேரிடுகிறது அந்த தோழருடைய கால்கள் அண்ணல் அவர்களின் குரலைக்கேட்டதும் அங்கிருந்து நகர மறுத்து விடுகிறது. 

நெஞ்சில் நிறைந்த நபியின் உருவத்தை கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களின் குரலை செவிகளால் கேட்டு குதூகலமடையும் கண் தெரியாத தோழர்கள் பலர் அன்றாடம் அண்ணல் அவர்களை சூழ்ந்து கொள்வது அக்கால வழக்கம். 

அதனால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் என்ற ஸலாமை உரக்கக் கூறுகிறார் அவரை அவ்விடத்தில் கண்டதும் விவகாரமே இது தான் என்பதால் இந்த இடத்தில் இவர் வந்து விட்டாரே என்று அண்ணல் அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது முகத்தை சுளிக்கிறார்கள் அவர்கள் மீது கடு கடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த ஆருயிர் தோழர்களை அண்ணல் அவர்கள் காணவில்லை என்றாலும், அன்பே உருவான அண்ணல் அவர்களை அந்த ஆருயிர் தோழர்கள் காணவில்லை என்றாலும் அந்தப் பொழுது அவர்களை விட்டு மறைவது கடினமாக இருக்கும் அப்படிப்பட்டப் பாசம் அது, நட்புக்கு இலக்கனம் வகுத்தளித்த தோழமை அது.

அண்ணல் அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள், மஹான்கள் எல்லாம் தங்களைச் சுற்றி இருந்தவர்களை சீடர்களாக ஆக்கி வைத்திருந்தனர் அண்ணல் அவர்கள் மட்டும் விதி விலக்காக தங்களுடன் இணைந்திருந்தவர்களை தோழர்கள் என்ற அந்தஸ்த்தை வழங்கி சிறிதளவும் இடைவெளி இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் எழுப்பபட்ட இஸ்லாம் எனும் கோட்டையை சரிப்பதற்கான ஷைத்தானின் சூழ்ச்சியை அல்லாஹ் அறிந்துகொண்டு கண் தெரியாத தோழர் மீது அண்ணல் அவர்கள் கோபம் கொண்டதற்காக அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான்.  

1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக 168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். 26
ஆரம்ப காலத்திலேயே மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உம்மு  மக்தூத்(ரலி)அவர்கள் முதன்மையானவர்கள் அத்துடன் அல்லாஹ்வின் புனித சொற்களாகிய திருமறைக்குர்ஆனை உள்ளத்தில் பூட்டி வைக்காமல் அதை பலருக்கும் எத்திவைப்பதில் மதீனாவில் இரவு பகலாக பாடுபட்டவர்.

நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் 'முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், 'இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4941.

இப்படிப்பட்ட அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய ஒருவர் அலச்சியம் செய்யப்ட்டால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருப்பானா ? உடனே திருவசனத்தை இறக்கி அவர் அலச்சியம் செய்யப்படுவதை கண்டித்து கண்ணியப்படுத்த வைத்தான்.

இது முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் ஆனாலும் கோபம் வந்து விட்டதால் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. கோபம் கண்ணை மறைத்து விடும் என்று கூறுவது அனைவருக்குமே பொருந்தி விடுவதற்கு இதுவும் சான்றாகும்.

செல்வந்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்தம் செய்யும் நோக்கில் அண்ணல் அவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் மாறாக விளக்கமளித்து தூய இஸ்லாத்தின் எந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் பேசி தஃவா செய்து இஸ்லாத்திற்குள் எடுப்பதற்கே சென்றிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களுடனான ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விடத்தை விட்டு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்(ரலி) அவர்கள்; நகராத காரணத்தால் அந்த சிறு இடைவெளியில் ஷைத்தான் அண்ணல் அவர்களுக்கு கோபத்தை விதைத்து விட்டான்.

அண்ணல் அவர்களின் கோபம் நீடித்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி) அவர்கள் அலச்சியம் செய்த நிலையில் இந்த பெருங் கூட்டம் இஸ்லாத்திற்குள் வரவேண்டிய அவசியமில்லை இது ஷைத்தானின் முயற்சியால் சமத்துவத்திற்கு சாவு மணி அடிக்கும் வேலை என்பதை ஷைத்தானின் மறைவான சூழ்ச்சியை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  ஷைத்தானின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து சமத்துவத்தை மேலோங்க செய்து விடுகிறான்.

இவர் அலச்சியம் செய்யப்பட்டுத்தான் அவர்கள் உள்ளே வர வேண்டும் என்றால் அவர்களை விட உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்கும் பிறரால் இழிவாக கருதப்பட்ட இந்த கண் தெரியாதவர் மேல் என்று நபியிடம் கூறி நீதியை நிலை நாட்டினான் நீதியாளன் அல்லாஹ்.

80: 5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.
80: 7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
80: 8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

அதன் பிறகு அண்ணல் அவர்கள் அவர்களுடைய வாழ்நாளிலும் அதுப்போன்று யாரிடமும் கோபம் கொண்டு கடு கடுத்ததேக் கிடையாது.

நிதானம் இழக்க வில்லை
அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு கோபம் வந்தது என்றதும் அது எப்படிப்பட்டக் கோபமாக இருந்திருக்கும் ? அங்கு என்ன நடந்திருக்கும் ? என்ன மாதிரி திட்டி இருப்பார்கள் ? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். 

அண்ணல் அவர்களின் முகம் தான் கோபத்தால் சிவந்ததே தவிர வாய் வார்த்தைகளைக் கொட்ட வில்லை. கோபத்திலும் கூட நிதானம் காத்தது அண்ணல் அவர்களைப் போன்று உலகில் எவரையும் அன்றும், இன்றும், என்றும் எவராலும் கோடிட்டுக் காட்டவே முடியாது.

அருள் அகற்றப்ட்டவர்கள்
கோபம் யாரையும் விட்டு வைக்காது அது யாரை ஆக்ரமித்து விட்டதோ விடை பெறும் பொழுது பெரிதாக இல்லை என்றாலும் சிறிய அளவிலேனும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விலகிச் செல்லாது யார் மீது அல்லாஹ்வின் அருள் உள்ளதோ அவர்களைத் தவிர.

யாருடைய உச்சந் தலையில் கோபம் குடி கொண்டு கடைசிவரை இறங்க வில்லையோ அவருடைய உச்சி முடி ஷைத்தானின் கையில் இருக்கிறது என்பதாக விளங்கிக் கொண்டு துஷ்டனை கண்டால் தூர விலகிக் கொள்வது போல் விலகி கொள்ள வேண்டும்.
 
அவருடைய உச்சி முடியை பிடித்துக்கொண்டு ஷைத்தான் அவரை வழி நடத்துவான் அவரிடமிருந்து அல்லாஹ்வின் அருள் அகற்றப்பட்டு விடும் அவன் ஷைத்தானின் அடிமையாகி விடுவான்.

அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன்மக்களாக நாம் நம்மை ஆக்கிக் கொண்டால் மட்டுமே  கோபம் அதிகம் வராது வந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன் அல்லாஹ் நம்மை அதிலிருந்து மீட்டெடுத்து விடுவான்.

அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

கோபம் ஷைத்தானின் தூண்டுதல் தான் என்பதை பற்றியும், அதன் கொடிய விளைவுகளைப் பற்றியும் அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்