திங்கள், 9 ஜூலை, 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

20:88. அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் 'இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்'' என்றனர்.19



அர்த்தமுள்ள கோபம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்தக் கட்டுரையில் நாட்டில் இரு சாராருக்கு மத்தியில் நிலவும் பிரச்சனைகளை நிர்வாக பொறுப்பிலுள்ளோர் நேரடியாக சென்று தீர்த்து வைக்க வேண்டும் அல்லது பிரச்சனையின் வீரியத்திற்கு ஏற்றவாறு அவர்களை இருக்கும் இடத்திற்கு வரவழைத்துப் பேசித் தீர்த்து வைக்க வேண்டும் என்றும், நாட்டில் இரு வகுப்பார்களுக்கு மத்தியில் நிலவும் பிரச்சனைகளை அணுகும் போது அவர்கள் இருவரும் நாட்டுக் குடிமக்கள் எனும் நற்சிந்தனையில் அணுக வேண்டும் என்றும் பார்த்தோம். 

நிர்வாக பொறுப்பிலுள்ளோர் அவரவருடைய நிர்வாகத்தின் கீழ் இருந்த மக்களின் பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்றும் அவர்கள் என்ன நிலைக்கு உள்ளாக்கப் பட்டார்கள் என்பது குறித்தும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்பதையும் பார்த்தோம்,

அதேப்போன்று நிர்வாக பொறுப்பிலுள்ளோர் மக்களில் யாருக்காவது கோபத்தில் அநீதி இழைத்து விட்டால் அது அவருடைய நிர்வாகத்தின் எல்லைக்கு வெளியே விரட்டப்படாதவரை ஜமாத்திலிருந்து முழுமையாக நீக்கப்படாதவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அதற்கு உதாரணமாக கஃஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களுடைய வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை உதாரணமாகக் காட்டினோம்.

ஆட்சித் தலைவர் மற்றும் மார்க்க அறிஞர்கள் மக்களிடம் இறைவனுக்கு மாறு செய்யும் மார்க்க விரோதப் போக்கைக் கண்டு கோபம் கொள்வது.
ஆட்சித் தலைவர் மற்றும் மார்க்க அறிஞர்கள் மக்களிடம் காணும் இறைவனுக்கு மாறு செய்யும் மார்க்க விரோதப் போக்கைக் கண்டு கடுமையாக கோபம் கொள்ள வேண்டும். 

முதலில் எந்தப் பகுதியில் இறைவனுக்கு மாறு செய்யும் போக்கு நடக்கின்றதோ அந்தப் பகுதி நிர்வாகி மீது தலைமை நிர்வாகம் கடுமையான கோபம் கொள்ள வேண்டும். 

அதற்கடுத்து மக்களிடத்தில் கோபத்துடன் நிலமையை விளக்கி விட்டு தங்களது அதிகாரத்தைப் பயன் படுத்தி மக்களிடம் புகுத்தப்பட்ட இறைவனுக்கு மாறு செய்யும் பாவச் செயலை மாற்றி சீரமைக்க வேண்டும். 

இதில் மென்மைப் போக்கை கையாளக் கூடாது மென்மைப் போக்கைக் கையாண்டால் ஓறிரைக் கொள்கையில் வரம்பு மீறுவோர் அந்த கோபத்தின் அளவுக்கே அதன் வீரியத்தை உணர்வார்கள்.

வரலாற்றில் ஓர் நாள்.
மூஸா(அலை) அவர்கள் தங்களுடைய சமுதாயத்து மக்களிடம் ஓறிரைக் கொள்கையை நிலை நாட்டினார்கள் ஒரு நாள் அல்லாஹ்விடம் வஹியைப் பெறுவதற்காக 'தூர்' மலைக்கு சென்றிருந்தார்கள் அல்லாஹ் அவர்களுக்கு வஹிச் செய்தியை அறிவிக்கும் போதே நீ வந்தப் பின் உனது சமுதாயத்தை சாமிரி வழி கெடுத்து விட்டான் என்றத் தகவலையும் சேர்த்தேக் கூறினான்.  

20: 85. 'உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்'' என்று (இறைவன்) கூறினான்.

மேல்படி அதிர்ச்சித் தகவலை அல்லாஹ்விடமிருந்து அறிந்ததும் கோபத்துடன் மூஸா(அலை) அவர்கள் தங்கள் சமுதாயத்து மக்களிடம் விரைந்து சென்றார்கள் வடிவமைக்கப்பட்ட ஒரு காளைக் கன்றை அந்த மக்கள் வணங்குவதைக் கண்டு அதேக் கோபத்துடன் அதை அசத்தியம் என்று தெளிவுப் பெறும் வரை தொடர்ந்து உரை நிகழ்த்தினார்கள். 

20:86. 'உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். 'என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?'' என்று கேட்டார்.

20:87. 'நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.

20:88. அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் 'இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்'' என்றனர்.19

20:89. 'அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

என்று அவர்களிடம் உரை நிகழ்த்தி அவர்களை தெளிவடையச் செய்து விட்டு தன்னுடன் இணைந்து இந்தப் பணியை (அழைப்புப் பணியை) செய்வதற்காக இறைவனிடம் கேட்டு அனுமதிப் பெற்றிருந்த தனது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களிடம் இதை நீ எப்படி அனுமதித்தாய் நான் திரும்பி வரும் வரை மக்களை கண்காணித்துக்கொள் என்று உன்னிடம் நான் பொறுப்பு சாட்ட வில்லையா ? என்னுடைய ஸ்தானத்தில் நீ இருந்து இவர்களை சீர்திருத்தாமல் விட்டு விட்டாயே எனது கட்டளையை புறக்கனித்து விட்டாயே என்றுக் கூறி மக்கள் காணும் விதமாகவே ஹாரூன்(அலை) அவர்களை தாக்கத் தொடங்கினார்கள்.

20:92, 93. 'ஹாரூனே! அவர்கள் வழி கெட்டதை நீர் பார்த்த போது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை?'' எனது கட்டளையை மீறி விட்டீரே!'' என்று (மூஸா) கேட்டார்.26

20:94. ''என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்'' என்று (ஹாரூன்) கூறினார்.

ஹாரூன்(அலை) அவர்களுடைய தலை மூஸா(அலை) அவர்களின் ஒரு கையிலும், தாடி ஒரு கையிலுமாக சிக்கிக் கொண்டது. 

இது எப்படிப் பட்ட நிலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் ? இவ்வாறு யார் யாரைப் பிடித்தாலும் கோபம் வராதவருக்கும் கோபம் சீறிப் பாய்ந்து கொண்டு வந்து விடும் அசுர வேகத்தில் இரத்தம் நரம்புகளில் பாய்ந்தோடி உடல் முழுவதையும் சூடாக்கி அது கை கலப்பில் முடியாமல் விடாது. 

ஆனாலும் கடும் கோபத்தை உண்டு பண்ணக்கூடிய இந்த நிலையிலும் ஹாரூன்(அலை) அவர்கள் பெரும் நிதானத்தைக் கடைப் பிடித்தார்கள்.

மூஸா(அலை) அவர்களின் கடுமையானப் பிடியில் அவர்களால் திமிற முடியாமல் அவர்களுடைய பிடிக்குள்  கட்டுண்டவர்களாக  (எனது தாயின் மகனே) எனது அருமை சகோதரரே என்னால் இயன்றளவு இறைவனுக்கு மாறு செய்யும் இந்த இணைவைப்பு எனும் பாவச்செயலைக் கண்டு நான் சகித்துக் கொண்டிருக்க வில்லை சாமிரியின் சதியில் வீழ்ந்து விடாதீர்கள் இது உங்களுக்கான சோதனை, அளவற்ற அருளாலன் அல்லாஹ் ஒருவன் தான் என்னைப் பின்பற்றுங்கள் என்றுக் கூறி இயன்றளவு என் பக்கம் வருமாறு மக்களை அழைத்தேன் ஆனால் எனது உபதேசத்தை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

உபதேசத்தை ஏற்க மறுத்தவர்களை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் (ஸாமிரியை ஆதரித்தவர்களாக மக்கள் இருக்கும் நிலையில்) அது கலவரமாக மாறி அதன் மூலம் மக்களிடத்தில் பிரிவினை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்.

நான் வரும் வரை காத்திருக்கக் கூடாதா உனது கடுமையான நடவடிக்கையால் மக்கள் பிரிந்து விட்டனரே என்றுத் தாங்கள் கூறி விடுவீர்களோ என்றும் அஞ்சினேன் அதனால் அவர்களிடத்தில் என்னால் கடுமையாக நடந்து கொள்ள முடியவில்லை என்று மூஸா(அலை) அவர்களிடம் ஹாரூன்(அலை) அவர்கள் மென்மையாகக் கூறி அவர்களின் கோபத்தைக் குறைத்துப் பிடியைத் தளர்த்தினார்கள்.   

20:90. 'என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!'' என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

20:91. 'மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்'' என்று அவர்கள் கூறினர்.

மூஸா(அலை) அவர்கள் திரும்பி வரும் வரை என்ற வாக்குறுதியை அந்த மக்கள் அளித்த ஒருக் காரணத்தாலும் ஹாரூன்(அலை) அவர்கள் சற்று விலகி இருந்தார்கள். 

மூஸா(அலை) அவர்கள் ஏகத்துவத்தை நிலை நிருத்தி விட்டு உலகை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடவில்லை இறைவனிடம் வஹியைப் பெறவே சென்றிருந்தார்கள் உலகை விட்டு நிரந்தரமாகப் பிரிந்திருந்தார்கள் என்றால் இறைவனின் கருணையிலிருந்து தூரப்படுத்தும் இந்த பாவச் செயலை ஹாரூன்(அலை) அவர்கள் ஒருபோதும் கண்டும் காணாமல் இருந்திருக்க மாட்டார்கள் அதை அவர்களே கூறவும் செய்கின்றார்கள். 

ஹாரூன்(அலை) அவர்களின் நியாயமான பதில் மூஸா (அலை) அவர்களின் கோபத்தைக் குறைத்ததும் அவர்களை தங்களுடையப் பிடியிலிருந்து விடுவித்து விட்டார்கள்.

மூஸா(அலை) அவர்களுடையப் பிடி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை திருக்குர்ஆனைப் படித்தவர்களுக்கு விளங்கும் அப்படிப்பட்டவர்களுடையப் பிடி ஹாரூன்(அலை) அவர்களுடைய நியாயமான காரணங்களுடன் கூடிய மென்மையான பதிலால் விலகி விட்டது.

எதிராளியிடமிருந்து வரும் பதில் நியாயமானதாக இருந்தால் அது கோபத்தைக் குறைத்து அறிவுக் கண்களை திறக்கச் செய்ய வேண்டும் மாறாக என்ன சொன்னாலும் சரி பிடித்தப் பிடியை விட மாட்டேன், எடுத்தக் கம்பை ஒடியும் வரை அடிக்காமல் ஓய மாட்டேன் என்று அடம் பிடித்தால் திருக்குர்ஆன் வந்து என்னைத் திருத்தியது என்று யாராலும் சொல்லவே முடியாது. 

ஹாரூன்(அலை) அவர்களை தங்களுடையப் பிடியிலிருந்து விடுவித்ததும் இறைவனின் பெயரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வயிறு வளர்க்க திட்டம் தீட்டி காளைக் கன்றை உருவாக்கி கடவுளாக அறிமுகப்படுத்திய சாமிரியின் பக்கம் அதேக் கோபத்துடன் மூஸா(அலை) அவர்கள் திரும்பினார்கள்.  

20:95. 'ஸாமிரியே! உனது விஷய மென்ன?'' என்று (மூஸா) கேட்டார்.

20:96. 'அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான்.19

20:97. 'நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.19

  • ஸாமிரியின் வார்த்தையில் மதி மயங்கி விட்டோம் என்று மக்கள் அளித்த பதிலை மூஸா(அலை) அவர்கள் ஏற்றார்கள்.
  • தனது சகோதரர் ஹாரூன்(அலை) அவர்களின் நியாயமான காரணங்கள் அடங்கிய பதிலையும் ஏற்றுக் கொண்டார்கள். 
  • ஆனால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பூமியில் போலி கடவுளை நிர்மானித்து வயிறு வளர்க்க திட்டம் தீட்டிய சாமிரியின் எந்த பதிலையும் எந்த விளக்கத்தையும் அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.

மக்கள் காணும் விதமாக தீ மூட்டி சாமிரியின் கை வண்ணத்தில் உருவான போலிக் கடவுளை நெருப்பிலிட்டுப் பொசுக்கினார்கள். 

இன்றைய நிலை...
உலக ஆதாயங்களுக்காக கடும் கோபம் கொள்ளக் கூடிய இன்றைய அதிகாரப் பொறுப்பிலுள்ளோர் அல்லாஹ்வின் மார்க்கம் சிதைக்கப்படுவதை அதன் தூய வடிவம் மாற்றப் படுவதைக் கண்டு கவலை அடைவதில்லை அதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் மீது கடும் கோபம் கொள்வதில்லை. மக்களிடத்தில் அதை விளக்கித் தெளிவடைய வைப்பதற்கோ, அதற்கு காரணமான புரோகிதர்களை ஒடுக்கி ஓரம் கட்டுவதற்கோ அவர்களின் தயாரிப்புகளை குழி தோண்டிப் புதைத்து முடிவு கட்டுவதற்கோ கடும் கோபத்துடன் களமிறங்குவதில்லை. 

உலக ஆதாயங்களுக்காக மூத்த சகோதரர் தனது இளைய சகோதரரிடம் கடும் கோபத்தை மேற்கொள்வார் ஆனால் தர்ஹாவுக்குப் போகாதே, மௌலூது ஓதாதே, ஹத்தம் ஃபாத்திஹா ஓதாதே என்றுக் கூறி கடும் கோபத்தை மேற்கொள்வதில்லை, மல்லுக்கு நிற்பதில்லை.

படிப்பினைகள்
அல்லாஹ்வுக்காக மூஸா(அலை) அவர்கள் கோபம் கொண்டார்கள், அல்லாஹ்வுக்காக ஹாரூன் (அலை) அவர்கள் பொறுமையை மேற்கொண்டார்கள்.

  • அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய தூய மார்க்கத்திற்காக அதிகாரப் பொறுப்பில் உள்ளோர் மூஸா(அலை) அவர்களைப் போல் கோபம் கொள்ளவும் அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வேண்டும்.
  • அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய தூய மார்க்கத்திற்காக அதிகாரப் பொறுப்பிலுள்ளோர், மார்க்க அறிஞர்கள, தந்தை, சகோதரர் கோபம் கொண்டால் அதன் கீழ் நிலையிலுள்ளோர் ஹாரூன்(அலை) அவர்களைப் போன்று கட்டுப்பட வேண்டும், பொறுமையை மெற்கொள்ள வேண்டும்.

அவ்வாறெனில் அல்லாஹ்வின் அருள் அந்த சமுதாயத்தின் மீது இறங்குவதை எவராலும் தடுக்க முடியாது. 

  • உலக வாழ்க்கைக்குப் பொருள் சேர்ப்பதற்காக கோபத்துடனும் வீரியத்துடனும் ஓடி ஆடி உழைப்பவர்கள் அல்லாஹ்வுடைய தூய மார்க்கம் மேலோங்குவதற்கு அதன் மூலம் நிம்மதியான மறுமை வாழ்க்கைக்கு நன்மைகளை சேர்ப்பதற்காகவும் கோபத்துடனும் வீரியத்துடனும் செயல் பட வேண்டும்.  

இதுவே மேற்காணும் மூஸா(அலை), ஹாரூன்(அலை) அவர்களின் சம்பவத்தில் பெறும் படிப்பினைகளாகும். 

கோபம் சந்மந்தமாக இன்னும் சில தகவல்களை அடுத்து வரும் ஆக்கத்தில் அல்லாஹ் நாடினால் காண்போம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக